சுருளியாறு மின்நிலைய சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை: பஸ் பயணிகள், பொதுமக்கள் பீதி

 

கூடலூர், மே 4: சுருளியாறு மின்நிலைய சாலையில் குட்டியுடன் காட்டுயானையின் நடமாட்டம் தொடங்கி உள்ளதால் மின்நிலைய பணியாளர்கள், பஸ் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் சுருளி அருவி அருகே உள்ளது சுருளியாறு மின் நிலையம். இது மேகமலை வன உயிரின சரணாலய பகுதியாகும். இங்கு கடந்த 40 ஆண்டுக்கு முன் இரவங்கலாறு அணை தண்ணீர் மூலம் 35 மெகாவாட் மின்சார தயாரிக்கும் மின்நிலையம் தொடங்கப்பட்டது. இந்த மின் நிலையத்தில் பணிபுரிவோர் பலர் அனைத்து தேவைகளுக்கும் அருகிலுள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, கம்பம், கூடலூர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு 1974ல் தொடங்கப்பட்ட ஆரம்பப்பள்ளியும் உள்ளது.

சுருளியாறு மின்நிலைய வனப்பகுதியை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய விளை நிலங்கள் உள்ளது. இதில் வாழை, கொட்டைமுந்திரி, மா உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட் டுள்ளன. வனப்பகுதியை ஒட்டி விளைநிலங்கள் இருப்பதால், அவ்வப்போது யானை, காட்டு எருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவுதேடி காட்டை விட்டு வெளியேறி விளைநிலத்திற்கு வரும். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் வனத்திலிருந்து குட்டியுடன் வெளியேறிய யானை ஒன்று மின்நிலைய ரோட்டுப்பகுதியில் அடிக்கடி உலா வருகிறது.

இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் மின்நிலைய பணியாளர்களும், மின்நிலையத்திற்கு செல்லும் பஸ் ஊழியர்களும் பயத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘இது சுருளி அருவியில் முகாமிட்டிருந்த யானைபோல் உள்ளது. அது குட்டியுடன் ரோட்டை கடந்து காட்டுக்குள் செல்வதை பஸ் பயணி படமெடுத்துள்ளார். மற்றபடி குடியிருப்பு பகுதிக்கு யானைகள் செல்வில்லை, யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை’’ என்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை