சுருட்டிய கோடிகளை பாதுகாக்க சேலத்துப் பக்கம் சாய்ந்த மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் தாமரை கட்சி நிர்வாகிகள் மீது புகார் குவிகிறதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘விழுப்புரம் மாவட்டத்தில் தாமரை கட்சியின் அதிகாரம் அதிகரித்துவிட்டதாம்.  ஒன்றிய அரசு என்று கூறி அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் ஆதிக்கம் அதிகரித்து விட்டதாக ஆட்சியர் வரை புகார் சென்றிருக்கிறதாம். மாவட்ட தலைநகரில் உள்ள ஒரு அதிகாரியை தாமரை கட்சியின் சார்பு அணி நிர்வாகி ஒருவர் மிரட்டி பத்து லட்சம் கேட்டு பேரம் பேசும் ஆடியோ வைரல் ஆகி விட்டதாம். அவர்களாகவே ஒரு புகார் மனுவை போட்டு அதிகாரியை சிக்கலில் ஏற்படுத்தி 10 லட்சம் கேட்டு மிரட்டி வருகிறார்களாம். அதிகாரியோ தனது சங்கத்தின் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளாராம். அதிகாரிகள் விசாரணையில் தாமரை கட்சியினர் திட்டமிட்டு ஆதாரமில்லாத புகாரை கூறி வருவது தெரிய வந்துள்ளதால், அந்த தாமரை கட்சியினர் மீது சங்கத்தின் சார்பில் புகார் அளிக்க உள்ளார்களாம். ஒன்றிய அரசு என்று தனது கட்சிப் அதிகாரத்தை கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் முதல் மிரட்டி வரும் சம்பவம் தலைதூக்கி உள்ளதால் அரசு அதிகாரிகள் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘பத்து வருட காலத்தில் சுருட்டிய ஆயிரக்கணக்கான ‘சி’-யை பாதுகாப்பதற்காக சேலத்துக்காரர் பக்கம் சாய்ந்துவிட்டாராமே மாஜி அமைச்சர்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதிசோழன் மாவட்டத்தில் விட்டமின் ‘ப’ கொட்டும் துறையில் 10 ஆண்டு காலம் அமைச்சராக இருந்தவர் கர்மவீரர் பெயரை கொண்டவர். ஆரம்ப காலத்தில் சின்னமம்மி மூலம்  கட்சிக்கு அடையாளம் காட்டப்பட்ட கர்மவீரர், ஆயிரக்கணக்கான சொத்தை  பாதுகாத்து கொள்ள வழிதெரியாமல் இருந்து வந்தாராம். சின்ன மம்மிக்கு தற்போது தேனிக்காரரின் ஆதரவு இருந்து வருவதால் தன்னிடம் உள்ள சொத்தை பாதுகாத்து கொள்வதற்காக திடீர் சேலத்துக்காரர் பக்கம் சாய்ந்துள்ளாராம். தன்னால் அடையாளம் காட்டப்பட்ட கர்மவீரர், தனக்கு எதிராக செயல்படுவது கண்டு அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வருகிறாராம். இதற்காக நெற்களஞ்சிய மாவட்ட செயலாளரான வைத்தியானவரை வைத்து கர்மவீரருக்கு செக் வைக்க அதற்கான வேலையில் சின்னமம்மி டீம் இறங்கியுள்ளதாக மனுநீதி சோழன் மாவட்ட இலைகட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பூட்டு மாவட்டத்து பிரச்னை என்ன…’’‘‘இலைக்கட்சியில் தோழியை எதிர்த்து தர்மயுத்தத்தை துவக்கிய ஒருங்கிணைப்பாளருக்கு பூட்டு மாவட்டத்தில் பக்கபலமாக இருந்தது, முன்னாள் மந்திரியான ஊர்ப்பெயரை தன் பெயருக்கு முன்னாள் கொண்ட நாதர். இப்போது இவர் இணை ஒருங்கிணைப்பிற்கு ஆதரவாளராக மாறி விட்டார். பூட்டு மாவட்டத்தை பொறுத்தவரை கிழக்கு-மேற்கு இரு பகுதி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் இணை ஒருங்கிணைப்பிற்கே ஆதரவுக்கரம் நீட்டி இருக்கிறார்கள். இதில் உளறல் முன்னாள் மந்திரியானவர் வெளிப்படையாகவே ஆதரவுக் களத்தில் இருக்கிறார். தர்மயுத்த  காலத்தில் ஒருங்கிணைப்பாளரை நம்பிப்போனவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அத்தோடு தோழியுடன் ஒருங்கிணைப்பாளர் மறைமுகத் தொடர்பு வைத்திருப்பதாகவும் அனைவருமே நம்புகின்றனர். அப்படி ஒரு நிலைமை வந்தால் முக்கியமாக ஊர்ப்பெயரை தன் பெயருக்கு முன்னாள் கொண்ட நாதர் மிகவும் பாதிக்கப்படுவார். அதனாலேயே திட்டமிட்டு இவர் தன் ஆதரவாளர்களுடன் இணை ஒருங்கிணைப்பு அணிக்குத் தாவி இருக்கிறார், தோழியின் காலில் விழுந்து  எழுந்தவராக இருந்தாலும், அவரைத் திரும்பத் தேட மாட்டார் என்ற  நம்பிக்கையிலேயே இப்படி பலரும் சேர்ந்து வருகிறார்களாம். ஆனால், அதை விட ஆபத்தாக இணை ஒருங்கிணைப்பாளரின் போக்கு, தாமரைக் கட்சியுடன் சங்கமமாகி, இலைக்கட்சியின் வலிமையைக் கெடுத்து விடுவார் போலிருக்கிறதே என்றும் பூட்டு மாவட்டத்தின் இலைக்கட்சி நிர்வாகிகளில் ஆதரவளித்தவர்களில் பலரும் கனத்த கவலையோடு பார்க்கும் அத்தனை பேருடனும் புலம்பித் தவித்து  வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.‘‘அதிமுகவை முழுமையாக கைப்பற்ற திட்டமிட்ட எடப்பாடி அணியினர், 750 ஸ்வீட் பாக்ஸ்களை கொடுத்தார்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஆமா..அதில் ஒரு மாவட்டத்துக்கு 5 ஸ்வீட் பாக்ஸ்கள் கொடுக்கப்பட்டதாம். இதனால்தான் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த மாவட்டச் செயலாளர்கள் ஸ்வீட் பாக்ஸ்களை வாங்கிக் கொண்டு அணி மாறினார்களாம். அதோடு ஆதரவு செய்தி வெளியிட பத்திரிகையாளர்களுக்கு தலா 3 லட்டுகள் வழங்கப்பட்டதாம். இதை எல்லாம் சேர்த்துதான் இவ்வளவு செலவாகியதாம். ஒரு தேர்தல் களத்தை சந்திப்பதுபோல அதிமுக தலைமையை கைப்பற்ற செலவு செய்யப்பட்டதாம்’’ என்றார் விக்கியானந்தா.             …

Related posts

சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து புல்லட்சாமிக்கு கவர்னர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா