நாகர்கோவில், ஜூன் 31: கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி நடந்தது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி செண்பகராமன்புதூரில் எம்.இ.டி. பொறியியல் கல்லூரியில் வைத்து நடந்தது.
‘பெரியாரும் பெண்ணுரிமையும், பெரியார் ஒரு தொலை நோக்காளர், பெரியார் அறிவியல் பார்வையும் அணுகுமுறையும் ஆகிய தலைப்புகளில் போட்டி நடத்தப்பட்டது. கல்லூரி செயல் அதிகாரி மகாதேவன் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சிவதாணு, மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம், திராவிடர்கழக காப்பாளர் பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். கல்லூரி முதல்வர் எழில் தினேகா, கல்வியியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீலதா ஆகியோர் போட்டியினை ஒருங்கிணைத்தனர். 170க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன் நன்றி கூறினார்.