வருசநாடு, ஜன. 19: மயிலாடும்பாறை அருகே நரியூத்து ஊராட்சிக்கு உட்பட்ட பொன்நகர் கிராமத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் ஆக்கிரமிப்புக்குள்ளானது. இந்நிலையில் நேற்று பொன்நகர் கிராமத்தை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட பெண்கள் நரியூத்து கிராமத்திற்கு சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ ரெங்கராஜ், ஊராட்சி மன்ற தலைவர் தங்கபாண்டியன், ஊராட்சி செயலர் செயராசு, ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுகாதார வளாகத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் தனியார் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் எனவும் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.