புதுக்கோட்டை: விராலிமலை தொகுதியில் மீண்டும் களமிறங்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சிக்காலத்தில் எதையும் செய்யாமல் தற்போது வாக்காளர்களை கவர அழுது புலம்பி வாக்கு கேட்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பழனியப்பனுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதனால் மீண்டும் அந்த தொகுதியில் களம்காணும் அதிமுக வேட்பாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், கலக்கமடைந்துள்ளார். ஆரம்பம் முதலே அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரிக்காமல் சென்டிமெண்டாக கண்ணீர்விட்டு கதறும் யுக்தியை அவர் கையாண்டுவருகிறார். குறிப்பாக கல்குளத்துப்பட்டி பரப்புரையின் போது, கொரோனா காலத்தில் தமது உடல் எடை 7.5 கிலோ குறைந்துவிட்டதாகவும், தமக்கும் சுகர், பி.பி. இருப்பதாகவும் கூறி கதறினார். மேலும் இயேசு சிலுவையை சுமந்தது போல் மக்களுக்கு உழைக்கிறேன் என குறிப்பிட்டார். கொரோனா தடுப்பு பணியில் சுகாதாரத்துறை அமைச்சரின் பங்கு முதன்மையானதாக இருக்க வேண்டும். ஆனால் அவற்றையே வாக்குக்காக சுயநலமாக பேசி அமைச்சர் கண்ணீர் மல்க நாடகம் ஆடிய காட்சி அங்கிருந்த அதிமுகவினரையே அதிருப்தி அடைய செய்தது. கடந்த 2 தேர்தல்களில் சொற்ப வாக்குகளில் வெற்றிபெற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், திமுகவுக்கு ஆதரவு பெருகி வருவதால் சென்டிமெண்டாக பேசி மக்களை ஏமாற்றும் வேளையில் ஈடுபட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமைச்சர் பேசியபோது முன்கூட்டியே திட்டமிட்டது போல சோகமான சினிமா பாடலின் இசையும் இசைக்கப்பட்டது பலரையும் முகம் சுழிக்கவைத்தது. …