சீர்காழி,ஜூன் 8: சீர்காழியில் நேற்று முன்தினம் இரவு மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இரவு சுமார் 10 மணி அளவில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து வெயிலின் தாக்கத்தில் தவித்து வந்த மக்களுக்கு திடீரென கொட்டிய மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சம்பா நடவு பணிகளை தொடங்குவதற்கும் குறுவை சாகுபடிகள் செய்த நெற்பயர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.