சிவகாசி, மே 29: சிவகாசி அருகே சரவெடிகள் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சிவகாசி அருகே அனுப்பன்குளம் பகுதியில் உள்ள பட்டாசு குடோன்களில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தனி தாசில்தார் திருப்பதி மற்றும் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அருணாசலம் என்பவருக்கு சொந்தமான குடோனில் சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட 1000 வாலா, 2000 வாலா, 5000 வாலா சரவெடிகள் பெட்டி, பெட்டியாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சரவெடிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். இதேபோல் விருதுநகர் தாலுகா வி.முத்துலிங்கபுரத்தில் சக்திவேல் ராஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன்களில் சரவெடிகள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த குடோனுக்கும் சீல் வைத்தனர.
மேலும் இவரது பட்டாசு ஆலையில் உற்பத்திக்கு தற்காலிக தடை விதித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சிறப்பு குழு தாசில்தார் ராஜ்குமார் விஸ்வநத்தம் வெற்றிலையூரணி சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தார். அப்போது அந்த வாகனத்தில் 20 பெட்டிகளில் சரவெடிகள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வாகனத்துடன் பட்டாசு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.