சிவகங்கை மாவட்டத்தில் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

 

சிவகங்கை, செப். 11: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நிதியாண்டுகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தாமதமாகும் சில பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பொது திட்டங்கள், தனி நபருக்கான நலத்திட்ட உதவிகள் உள்பட அனைத்து அரசு திட்டபணிகளையும் அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு மூலம் திட்டப்பணிகள் விரைவுபடுத்தப்படுவது மட்டுமின்றி, அதன் தரமும் உறுதிப்படுத்தப்படும். தனி நபர்களுக்கான நலத்திட்ட உதவிகள் உரிய பயனாளிகளுக்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். திட்டப் பணிகளில் தேவையற்ற கால தாமதம் கூடாது.

அரசு சார்பில் நலிவுற்ற, ஏழ்மை நிலையில் உள்ள, ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசுத்திட்டங்களை மக்களிடம் சேர்க்கும் வகையில் அரசு அலுவலர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார். நலத்திட்ட உதவிகள் பெற்றவர்கள் குறித்து அலுவலர்கள் தெரிவிக்கும் போது சில பயனாளிகளின் செல்போன் எண்களை பெற்று அவர்களிடம் செல்போனில் பேசி நலத்திட்ட உதவி கிடைத்ததை உறுதி செய்தார்.

அமைச்சரிடம் கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமானோர் கோரிக்கை மனு அளித்தனர். ஆய்வுக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், அரசு கூடுதல் தலைமை செயலாளர்(இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை) அதுல்யமிஸ்ரா, கலெக்டர் ஆஷா அஜித், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உறுப்பினர், செயலர் மேகநாத ரெட்டி, எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே, எம்எல்ஏ மாங்குடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

சிவகங்கை காஞ்சிரங்காலில் மாவட்ட இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார். சிவகங்கை அருகே நகரம்பட்டியில் கட்டப்பட்டு வரும் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் மணி மண்டப கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு கிராம மக்கள் கொம்பு ஊதி, மேள தாளத்துடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்