புதுடெல்லி: இந்திய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. அரியானாவில் இவர் முதல்வராக இருந்தபோது, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமனம் செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 2013ல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இளம் வயதில் கற்காத இவருக்கு, சிறையில் இருந்தபோது படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. தனது 82 வயதில் கடந்த 2017ம் ஆண்டு அவர் 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். இதில் உருது, அறிவியல், சமூக அறிவியல், இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகிய பாடங்களில் 53.4 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். ஆனால், ஆங்கில பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தார். இந்நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் அவர் 12ம் வகுப்பு தேர்வு எழுதினார். கடந்த 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆனால், 10ம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறாததால் அவரது 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் தனது 86வது வயதில் 10ம் வகுப்பு ஆங்கில தேர்வை உதவியாளர்(கையில் எலும்பு முறிவு காரணமாக எழுத முடியவில்லை) மூலமாக அவர் எழுதினார். …