பெரம்பூர்: புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையிலான போலீசார் நேற்று புளியந்தோப்பு ஆடுதொட்டி அருகே ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், கன்னிகாபுரம் சத்தியவாணி முத்து நகரை சேர்ந்த ஜோஸ்வா (எ) லாரன்ஸ் (22) என்பதும், இவரிடம் 45 கஞ்சா பொட்டலங்கள், பெரிய கத்திகள் மற்றும் 10 செல்போன்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:ஜோஷ்வாவின் நண்பரான சாக்ரடீஸ், கடந்த 2018ம் ஆண்டு வியாசர்பாடியில் வைத்து பிரசாந்த் என்பவரை கொலை செய்தார். இதற்கு பழிக்குப் பழியாக பிரசாந்த் என்பவரின் தம்பி தினேஷ் குமார், சாக்ரடீசை மணலி பகுதியில் வைத்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு தினேஷ்குமார், ஜோஸ்வாவை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார்.இதுபற்றி அறிந்த ஜோஸ்வா தனது நண்பர்களுடன் சேர்ந்து தினேஷ் குமாரை கொலை செய்ய திட்டம் திட்டி உள்ளார். தற்போது தினேஷ்குமார் கஞ்சா வழக்கில் வியாசர்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். விரைவில் அவர் வெளியே வர உள்ளார். அவ்வாறு வெளியே வரும் போது அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். வழக்கு செலவுக்கு பணம் இல்லாத காரணத்தினால் ஜோஸ்வா கஞ்சா விற்பனையில் இறங்கியுள்ளார். அவ்வாறு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது, புளியந்தோப்பு பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் இவரது நண்பரான வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியை சேர்ந்த சஞ்சய் (19) என்பவரும் இவருடன் கூட்டு சேர்ந்து வியாசர்பாடி பகுதியில் கஞ்சா விற்பனைகள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவரையும் கைது செய்தனர். ஏற்கனவே 2 கொலைகள் நடந்துள்ள நிலையில் தற்போது 3வது கொலைக்கு திட்டம் தீட்டிய போது 2 ரவுடிகள் போலீசாரிடம் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….