பண்ருட்டி: பண்ருட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன்(59). இவர் பண்ருட்டி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு இவர் பணியில் இருந்த போது, சுமார் 11 மணிஅளவில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ஆண்கள் உள் நோயாளி பிரிவு அருகில் படுத்திருந்த பெண்ணை இருட்டு பகுதிக்கு வா என அங்கு வந்த ஒருவர் அழைத்துள்ளார்.
இது சம்பந்தமாக அந்த பெண்ணிடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விசாரணை நடத்தினார். அப்போது அங்கு வந்த பண்ருட்டி ரத்தினம் பிள்ளை மார்க்கெட் பின்புறம் வசித்து வரும் மாயகிருஷ்ணன் என்பவரது மகன் டிரைவர் மாயமணி(39), பண்ருட்டி வி.எஸ்.பி நகரை சேர்ந்த சிதம்பரம் என்பவரது மகன் ஸ்டிக்கர் கடை மோகன்(32), பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டையை சேர்ந்த ரவி என்பவரது மகன் ரஞ்சித் குமார் (28), திருவதிகை வால்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திக் மகன் எலக்ட்ரீசியன் பார்த்திபன்(23) ஆகியோர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கையில் இருந்த லத்தியை தள்ளிவிட்டு அவரை சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப்-இன்ஸ்பெக்டர் எழில் தாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மணி, மோகன், ரஞ்சித்குமார், பார்த்திபன் ஆகிய 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.