சிப்காட் விரிவாக்கத்துக்கு உப்பளங்கள் கையகப்படுத்த எதிர்ப்பு

தூத்துக்குடி,ஆக.29: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். அப்போது விளாத்திகுளம் வட்டம் வைப்பார் அருகே உள்ள கலைஞானபுரம் மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ‘கலைஞானபுரம் பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்காக நாங்கள் பல தலைமுறைகளாக பயன்படுத்திவரும் நிலத்தை காலி செய்ய வருவாய்துறையினர் கூறுகின்றனர். இது குறித்து ஏற்கனவே, மனு அளித்துள்ளோம். இருப்பினும், நாங்கள் பயன்படுத்திவரும் உப்பளத்தை காலி செய்யுமாறு கூறுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் எங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கும் உப்பளங்களை சிப்காட் விரிவாக்கத்திற்கு எடுக்க அனுமதிக்க கூடாது’ என குறிப்பிட்டுள்ளனர்.தூத்துக்குடி தெற்கு ஒன்றிய பாஜ தலைவர் எட்வர்ட் ராஜா, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தலைவர் ஜெயசங்கர் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் அளித்த மனு:தூத்துக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட குமராகிரி, குலையன்கரிசல், சேர்வைகாரன்மடம், அத்திமரப்பட்டி ஆகிய ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை அருகே உள்ள பகுதிகளில் உரிய அனுமதியின்றி, வணிக நோக்கில் சிலர் நிலத்தடி நீரை எடுத்து தனியார் உப்பளங்கள், ஐஸ் கட்டி ஆலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். எனவே, இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முள்ளூர் பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர், உரிய அனுமதியின்றி ஊர் பொது கண்மாய்க்கு வரும் நீர் வரத்து ஓடையை மண்ணால் நிரப்பியுள்ளனர். படித்துறை, மதகு உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியுள்ளனர். எனவே,இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு