சின்ன மம்மியை விட ஆபத்தான வீரமானவரை காலி செய்தால் இலை கட்சி உருப்படும் என்று இலையின் தலைகள் பேசுவதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இவ்வளவு பெரிய மாவட்டத்துல பெரிய சரிவை ஏற்படுத்தி இலை கட்சியை அதலபாதாளத்துக்கு தள்ளிய வீரமானவரை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலையில் கலகத்தை ஏற்படுத்த தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்களை சின்ன மம்மி வெளியிட்டு வரும் நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக 15க்கும் மேற்பட்டவர்களை இலையின் இரட்டை தலைமை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறது. இந்த நிலையில்தான் கட்சியை விட்டு தூக்கியடிக்கும் பட்டியலில் வேலூரை சேர்ந்த மேலும் 2 நிர்வாகிகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 நிர்வாகிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழைய கட்சி பிரமுகர்கள் 3 பேர் என களையெடுப்புக்கான அடுத்த பட்டியல் ரெடியாகி உள்ளதாம். இவர்கள் சட்டமன்ற தேர்தலில் உள்ளடி வேலை பார்த்து, தங்கள் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்த விவகாரத்தின் அடிப்படையில் நீக்கப்பட உள்ளார்களாம். ஆனால், வெயிலூர் மாவட்டத்தில் டாக் வேற மாதிரி இருக்காம். காரணம், வெயிலூர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய  பிரமுகர், வெயிலூர் தொகுதி இலை வேட்பாளரை வசைபாடி பேசும் ஆடியோ ஆதாரம் உட்பட பல ஆதாரங்கள் திரட்டப்பட்டு மேலிடத்தின் கையில்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.இதுபற்றி அறிந்த உள்ளூர் மூத்த இலை  நிர்வாகிகள், இரண்டாம் கட்ட பட்டியல் இருக்கட்டும். கட்சிக்குள் குறுநில மன்னராகவே லோக்கலில் வலம் வந்து ஓசூர், பெங்களூரு, ஏலகிரி என்று கடந்த 5  ஆண்டுகளில் சொத்துகளை குவித்து கட்சியை காவு வாங்கியவர், வெயிலூர் மாவட்டத்தில் இலை கட்சியை மண்ணை கவ்வ வைத்த வீரமானவரை நீக்கினாலே கட்சிக்கு பாதி உயிர் வந்துவிடும்… அதைவிட்டுவிட்டு சின்ன அம்மாவிடம் பேசினார் என்பதற்கு எல்லாம் கட்சியில் இருந்து நீக்கினால் கட்சி எப்டி உருப்படும் என்று புலம்பி வர்றாங்க.. கட்சி உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்றால் வீரமானவரை கட்சியில் இருந்து கட்டம் கட்ட வேண்டும் என்று இரட்டை தலைமையை வலியுறுத்தி இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கோயிலின் 40 ஏக்கர் நிலத்தை அபகரித்தவரிடம் இருந்து வாங்க வேண்டும் என்று திடீரென்று பக்தர்கள் குரல் எழுப்ப என்ன காரணம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 2 நாட்களாக தேவபிரசன்னம் நடந்தது. அதில் கோயிலில் நித்திய பூஜைகளும் ஒழுங்காக நடக்கவில்லை. கோயில் உயரம் ஏற்கனவே 2 முறை உயர்த்தப்பட்டது.  இப்போது 3வது முறை உயர்த்த வேண்டும். இதற்கு அறிகுறிதான் நடந்த தீ விபத்து. கோயிலுக்குள் தரமான நெய் தீபம் ஏற்ற வேண்டும். மேலும் கூறியது தான் அதிர்ச்சி ரகமாம்… ‘கோயிலின் வடக்கே 40 ஏக்கர் கோயில் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.  இது யாருடைய கைவரிசையாக இருந்தாலும் அந்த சொத்துகளை மீட்க வேண்டியதும் அவசியம் என்று பக்தர்கள் தரப்பு கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தூங்கா நகரத்துல கல்வி நிர்வாக நிலைமை மோசமாகவே இருக்காமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகரத்து முக்கிய பல்கலையில் கடந்த ஆட்சி காலத்தில் விருந்தினர் மாளிகை, பழைய பொருட்கள் விற்பனை டெண்டர், கேண்டீனில் பால் பாக்கெட் முதல் பருப்பு வாங்கியது, வேலையே செய்யாத சிசிடிவிக்கு பராமரிப்பு, பேராசிரியர்கள் பதவி உயர்வு இப்படி  பல்வேறு முறைகேடுகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாம். இந்நிலையில் தொலைநிலை கல்வி இயக்ககத்தில் மட்டும் போலி மாணவர் சேர்க்கை, போலி மதிப்பெண் சான்றிதழ் என கடந்த 2018 வரை சுமார் ரூ.300 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த முறைகேடுக்காக லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை, சிலர் பணியிடை நீக்கம், பேராசிரியர் பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு நீதிமன்றம் வரை சென்று நீதிமன்ற தடை பெற்றது, ஒருவருக்கே இரு முக்கிய  பதவிகள் வழங்கியது. நேர்மையான பேராசிரியர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது, கடந்த ஆண்டு நேர்மையான முறையில் பணியாற்றிய ஊழல்களுக்கு துணை போகாத பதிவாளருக்கு அழுத்தம் கொடுத்து ராஜினாமா செய்ய வைத்தது உள்ளிட்ட பலதரப்பட்ட ‘‘தகிடுதத்தங்கள்’’ மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்தன. தற்போது ஆட்சி மாறியதால் நடவடிக்கை பாயும் என்ற அச்சத்தில் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை மறைக்க ஒரு சிலர் தற்போதைய துணைவேந்தர் மற்றும் நேர்மையான பேராசிரியர்கள் உள்ளிட்ட சிலருக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல்கள் வருகின்றன…’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கரன்சி இல்லாமலும் கூட்டணி ஆதரவு இல்லாமலும் கலங்கிக் கிடக்கும் வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி கண்டுகொள்ளாததால் அதிருப்தி கோஷ்டியிடம் ஐக்கியமான இலை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா