சின்ன சேலம் மாணவியின் மறு உடல்பிரேத பரிசோதனை வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய வேண்டும்: தந்தை தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சின்ன சேலம் பள்ளி மாணவி  உடலை மறு உடற்கூராய்வு செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்யுமாறு மாணவியின் தந்தை தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்ன சேலம் மாணவி மரணமடைந்ததையடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற ராமலிங்கத்தின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, ராமலிங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது.இதைதொடர்ந்து, உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நேற்று முறையீடு செய்தார். அப்போது மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.அவரது முறையீட்டை ஏற்று நீதிபதி வழக்கை விசாரித்தபோது, நீதிமன்றம் உத்தரவுப்படி மறு உடற்கூரய்வு முடிக்கப்பட்ட பிறகும் இன்னும் உடலை பெற்று கொள்ளவில்லை. அனைத்து நடைமுறைகளும் நீதிமன்ற உத்தரவுப்படி தான் நடைபெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையும் மனுதாரர் வாபஸ் பெற்றுவிட்டார் என்று தெரிவித்தார். அப்போது, மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை மீறி பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் இல்லாமலேயே மறு உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. தங்கள் தரப்பு மருத்துவர்களையும் பங்கேற்க செய்து மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தோம். உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது என்றார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை (இன்று) தாக்கல் செய்ய மனுதாரர் ராமலிங்கம் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார். அதேசமயம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மறு பரிசீலனை செய்ய போவதில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய ராமலிங்கம் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை  நீதிபதி தள்ளிவைத்துள்ளார். அதேசமயம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மறுபரிசீலனை செய்ய போவதில்லை என்றார்….

Related posts

சென்னையில் 17 வழித்தடங்கள் மூலம் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம்:  கட்டுப்பாடுகளை மீறினால் கைது  காவல்துறை எச்சரிக்கை

அடையாறு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் : காவல் துறை அறிவிப்பு

தி.நகர் காவல் மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கை கஞ்சா விற்ற 30 பேர் கைது