சின்னமனூர் : சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில் வாழை, தென்னை, காய்கறிகள் உள்ளிட்ட விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஊரின் தென்மேற்கு பகுதியில் பெருமாள்மலை ஹைவேவிஸ் மலை சாலையின் அடிவாரத்தில் அதிகளவில் மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மலைப்பகுதியில் வன விலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள் மான்கள், பாம்புகள், முயல்கள், சிங்கவால் குரங்குகள் உள்ளிட்டவைகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் மர்ம நபர்கள் மலைப்பகுதியில் தீ வைத்ததால் கடந்த சில நாட்களாக மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன.மேலும் வனவிலங்குகளும் தீயில் சிக்கி மடிந்து வருகின்றன. தொடர்ந்து தீ எரிந்து வருவதால் இப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சின்னமனூர் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மலையில் எரிந்து வரும் தீயை அணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் தீ வைத்த மர்ம நபர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….