வேலூர்: வேலூரில் சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்த தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை அவரது நண்பரை அடித்து விரட்டிவிட்டு, 3 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆஞ்சநேயர் கோயில் அருகில் நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் போதையில் ஒருவருக்கொருவர் தடியால் தாக்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவர்கள் தாங்கள் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போதையில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்ற போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்ததை தெரிவித்தனர். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 3 நாட்களுக்கு முன்பு காட்பாடியில் ஆண் நண்பருடன் இரவு காட்சி சினிமா பார்த்துவிட்டு வேலூர் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் இருப்பிடம் திரும்புவதற்காக ஷேர் ஆட்டோவில் நள்ளிரவில் ஏறினார். அதில் ஏற்கனவே 4 பேர் இருந்துள்ளனர். வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே ஷேர் ஆட்டோ சத்துவாச்சாரியை நோக்கி திரும்பியுள்ளது. அந்த பெண் ஊழியர் ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது, வழியில் பேரிகார்டு வைத்து அடைத்துள்ளனர். சத்துவாச்சாரி சென்று ஆற்காடு சாலை வழியாக இருப்பிடம் செல்லலாம் என்று கூறி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை வழியாக வந்துள்ளனர்.கலெக்டர் அலுவலகம் முன்பாக பாலாற்றங்கரை செல்லும் சாலை வழியாக ஆட்டோவை திருப்பியபோது, அப்பெண் மீண்டும் ஆட்டோ டிரைவரிடம் தவறான வழியில் செல்வது பற்றி கேட்டார். உடனடியாக ஆட்டோவில் வந்தவர்கள் அப்பெண்ணுடன் வந்த ஆண் நண்பரை அடித்து சாலையில் இறக்கிவிட்டு பாலாற்றங்கரையோரம் அப்பெண்ணை மிரட்டி அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள பார் அருகே வைத்து 3 பேர் அந்த பெண் ஊழியரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு, செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு அப்பெண்ணை விரட்டியுள்ளனர்.தொடர்ந்து ஏடிஎம் கார்டு மூலம் பெண் ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தையும் எடுத்து சென்றுள்ளனர். அந்த பணத்தை பங்கிடும்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின்போதுதான் போலீசில் சிக்கினர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மேலும் போதை ஆசாமிகள் கொடுத்த தகவலின்பேரில், மேலும் ஒருவரையும் போலீசார் பிடித்தனர். பிடிப்பட்ட 3 பேரிடமும் சத்துவாச்சாரி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை, அவரது ஏடிஎம் கார்டை வைத்து அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அந்த பெண் ஊழியரையும், அவரது நண்பரையும் நேரில் அழைத்து புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….