சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 5 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதற்காக தமிழகம் மற்றும் கர்நாடகாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இந்த கோயிலுக்கு மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதேபோல், பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் தங்கம், வெள்ளி மற்றும் பணம் உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர்.இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். இதனால், எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அதேபோல், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வரும் வரிசையில் கிருமிநாசினி மருந்து, முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கி தரிசனத்திற்கு அனுமதித்தனர். பக்தர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அணிவகுத்து நின்ற வாகனங்கள்காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் நேற்று அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இதற்காக பக்தர்கள் கார் மற்றும் பஸ்களில் வந்தனர். இதனால், கோயில் அருகே உள்ள மைதானத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….