Monday, July 8, 2024
Home » சித்தூர் அடுத்த பூதலப்பட்டில் இருந்து 7 கிராமங்களுக்கு செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும்-குறைதீர்வு நாளில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

சித்தூர் அடுத்த பூதலப்பட்டில் இருந்து 7 கிராமங்களுக்கு செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும்-குறைதீர்வு நாளில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

by kannappan

சித்தூர் : சித்தூர் அடுத்த பூதலப்பட்டில் 7 கிராமத்திற்கு செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் ஆபிசில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் முருகன் ஹரிநாராயணன் தலைமை தாங்கி மனுக்களை பெற்று கொண்டார். மாவட்டத்தில் இருந்து 237 பேர் மனுக்களை அளித்தனர். சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை வசதி ஏற்படுத்த கோரி 7 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது: பூதலப்பட்டு அடுத்த எகுவாகண்டறிக கிராமத்திலிருந்து 7 கிராமத்திற்கு செல்லும் 60 அடி சாலை உள்ளது. அந்த சாலையை அதிகாரிகள் அளந்து ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினர். தற்போது அச்சாலை 10 அடி அகலத்தில் உள்ளது. இதனால், வாகனஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து மண்டல வருவாய்த்துறை அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் 7 கிராமத்திற்கு செல்லும் சாலையை அகலப்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. தெலுங்கு தேசம் கட்சி எஸ்சி சங்க மாவட்ட தலைவர் சப்தகிரி பிரசாத் புகார் மனு அளித்தார். அதில், கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி கங்காதரநெல்லூர் அடுத்த பெரகண்ட்லாப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரன், விவசாயி. இவருக்கு அதேகிராமத்தை சேர்ந்த ஈஸ்வர் ₹10 ஆயிரம் கடன் வழங்கினார். ஆனால், ₹20 ஆயிரத்துக்கும் மேல் வட்டி கட்டியுள்ளார். கடந்த 3 மாதமாக வட்டி கட்டாததால் சந்திரனை அவரது மாந்தோப்புக்கு அழைத்துச்சென்று சரமாரியாக தாக்கி கை மற்றும் கால்களை உடைத்துள்ளார். சித்தூர் போலீசார் எஸ்சி வழக்கு பதிவு செய்தனர். வழக்கு ஆனவுடன் மாநில அரசு பாதித்தவருக்கு ஒரு வாரத்திற்குள் ₹1 லட்சம் நிதி வழங்க வேண்டும். 3 மாதத்திற்குள் மீதமுள்ள ₹4 லட்சம் வழங்க வேண்டும். ஆனால், 3 மாதங்கள் ஆகியும் சந்திரனுக்கு அரசு நிவாரண உதவித்தொகை வழங்கவில்லை. ஈஸ்வர் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எஸ்சி மற்றும் எஸ்டி வழக்குக்கான நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. சித்தூர் அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த ரத்தினம் அளித்த மனுவில் கூறிருப்பதாவது: எனக்கு சொந்தமான 2.52 ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். தற்போது மண்டல வருவாய்த்துறை அதிகாரிகள் எனது நிலத்தில்  ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிபதி நிலத்தை உடனே ரத்தினம் என்பவருக்கு வழங்க தீர்ப்பு வழங்கினார். ஆனால், மண்டல வருவாய்த்துறை அதிகாரி கோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து என நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. மனுக்களை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். …

You may also like

Leave a Comment

1 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi