தாம்பரம்: பல்லாவரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவரை பட்டாசு வெடித்து, மலர்தூவி, ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்று வருகின்றனர். அதன்படி, பொழிச்சலூர், பவானி நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களிடம் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆதரவு கோரினார். அப்போது அவர்கள், எங்கள் பகுதியில் கால்வாய் உடன் கூடிய சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் வசதி, சிறுவர் பூங்கா, ரேஷன் கடை மற்றும் ஏரியை தூர்வாரி, கரைப்பகுதியில் நடைபாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதற்கு அவர், ‘‘இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தவுடன், உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்’’ என உறுதியளித்தார். பின்னர், பம்மல் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சிட்லபாக்கம் ராஜேந்திரனை மகளிர் மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்களை வெற்றி பெறச் செய்வோம், அதற்கு எங்களின் முழு ஆதரவையும் தருவோம் என உறுதியளித்தனர். இந்த பிரசாரத்தின் போது, அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்….