சென்னை: சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 30 சதவீதம் பேரை குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு பதிலாக தனியார் பாதுகாப்பு படையினரை நியமிக்க திட்டமிட்டுள்ளது. நாட்டின் விமான நிலையங்களின் பாதுகாப்பு, அந்தந்த மாநில உள்ளூர் போலீசாரின் வசம் இருந்து வந்தது. கடந்த 1999ம் ஆண்டு, டெல்லி இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை தீவிரவாதிகள், காத்மாண்டுக்கு கடத்தி சென்றனர். அதன் பின்னர் நாடு முழுவதும் விமான நிலைய பாதுகாப்பு மத்திய தொழிலக பாதுகாப்பு படை எனப்படும் சிஐஎஸ்எப் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி சென்னை விமான நிலைய பாதுகாப்பு கடந்த 1999, அக்டோபர் மாதத்தில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 650 வீரர்களுடன் தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து 1,500 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விமான நிலையங்களின் பாதுகாப்பை, மாற்றியமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி மிக முக்கியமான பகுதிகளில் மட்டும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், மற்ற பகுதிகளில் தனியார் பாதுகாப்பு படையையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதில் முன்னாள் ராணுவத்தினரை பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் 1,500 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களில் 30 சதவீதம், அதாவது 450 பேர் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த காலி இடங்களுக்கு, தனியார் பாதுகாப்பு படையினர் புதிதாக நியமனம் செய்யப்படுகின்றனர். அதற்கான உத்தரவை, பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி தலைமை அலுவலகம் பிறப்பித்துள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் முதல்கட்டமாக 50 தனியார் பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விமான நிலைய இயக்குனர் சரத்குமார் நேற்று முன் தினம் பணி சான்றிதழ் வழங்கினார். அவர்களுக்கு 2 வார காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் தொடர்ச்சியாக பணி நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். …