சென்டர் மீடியன் பேரிகார்டுக்கு கம்பி கட்டும் பணியில் அப்துல் அலீம் (19), அனிக்குல் (20) ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, எதிர்திசையில் சென்னை – பெங்களூரு மார்க்கத்தில் அதிவேகமாக வந்த காரின் டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய கார் வேலை செய்துகொண்டிருந்த அப்துல் அலீம், அனிக்குல் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். அதில், அப்துல் அலீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அனிக்குல் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் உயிரிழந்த அப்துல் அலீம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலையில் பலத்த காயம் அடைந்த அனிக்குலை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.