சிவகங்கை, ஜூன் 12:சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடியேந்தி போராட்டம் நடைபெற்றது. சுங்கவரி வசூல் செய்வதை தனியாருக்கு கொடுப்பதை நிறுத்த வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை வழங்க வேண்டும். ஒய்வு பெற்றவர்களை கொண்டு பணி மேற்கொள்ளக் கூடாது.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதன் மூலம் 3500 பணியிடங்கள் இல்லாமல் செய்வதை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாரி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ராஜா வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில பொருளாளர் தமிழ், மாவட்ட செயலாளர் முத்தையா, மாவட்டத் துணைத் தலைவர்கள் கணேசன், பாலசுப்பிரமணியன், வீரையா மற்றும் சாலைப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.