சாலை நடுவே சீரமைக்கப்படாத பாதாள சாக்கடை: விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

ஈரோடு: பழுதடைந்து வருடத்துக்கு மேலாகியும், சாலை நடுவில் உள்ள சீரமைக்கப்படாத பாதாள சாக்கடையால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன.ஈரோடு, மாநகராட்சிப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன். அதன்படி, ஈரோடு, நசியனூர் சாலையிலும் கடந்த சில ஆண்டுக்கு முன்னர் பாதள சாக்கடை அமைக்கப்பட்டது. போக்குவரத்து அதிகம் உள்ள நகரின் பிரதான சாலைகளில் ஒன்றான இந்தச் சாலையில், வெட்டுக்காட்டு வலசு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பாதாள சாக்கடைகளின் மேல்பகுதி சிதிலமடைந்து, கழிவு நீர் சாலையில் வழிந்தோடி வந்தது. பல முறை அவை சீரமைக்கப்பட்ட பின்னரும், அவை மீண்டும் மீண்டும் சிதிலமடைந்து, கழிவு நீர் சாலையில் வெளியேறுவது வாடிக்கையானது.இந்நிலையில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை ஒன்றின் மேல்பகுதி கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் சிதிலமடைந்தது. அதன் மீது வாகனங்கள் செல்லாதவாறு சாலை நடுவில் தடுப்பு வைக்கப்பட்டது. கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், அதை முழுமையாக சீரமைக்காமல் சாலையில் கழிவு நீர் செல்லாதவாறு, அருகில் உள்ள சாக்கடை வழியாகச் செல்லுமாறு தற்காலிகமாக குழாய் பதித்து, திறந்த நிலை சாக்கடையில் விழுமாறு திருப்பி விடப்பட்டுள்ளது.இந்த நிலையில் பாதாள சாக்கடையின் சிதிலமடைந்த மேல்பகுதியைச் சீரமைக்காமல், சாலை நடுவில் அதன் மீது தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. வருடக்கணக்கில், சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள அந்தத் தடுப்பால் இருசக்கர வாகனங்கள், கார், பஸ், லாரிகள் அந்த பகுதியில் வரும்போது சாலை நடுவில் உள்ள அந்த தடுப்பை கடக்க சட்டென வலதுபுறமாக செல்லும்போது எதிரில் வரும் வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் தடுப்பை கடக்கும்போது போக்குவரத்து நெரில் ஏற்பட்டு வருகிறது.இரவு நேரங்களில், சாலை நடுவில் இருக்கும் அந்த தடுப்பால் நிலைகுலைந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, இப்பகுதியில் சிதிலமடைந்து வருடக் கணக்கில் சீரமைக்கப்படாமல் இருக்கும் இந்த பாதாள சாக்கடை குழியை சீரமைத்து, இப்பகுதியில் அடிகடி விபத்துகள் ஏற்பட்டு வருவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!