கோவில்பட்டி, ஜன. 23: பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் சாலை, குடிநீர் வசதிகள் செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு வழங்கும் போராட்டம் நடந்தது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னத்தம்பி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ், இசக்கி மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமாரிடம் வழங்கிய மனு விவரம்: பாண்டவர்மங்கலம் ஊராட்சி இ.பி.காலனி ஆனந்தம் நகர் 2வது தெரு, 3வது தெரு, எஸ்.எஸ்.டி. 1வது தெரு ஆகிய 3 தெருக்களில் சாலை மிகவும் மோசமாக இருப்பதால், அதில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு குடிநீர் குழாய் பதிக்க சாலை தோண்டப்பட்டு கரடு முரடான நிலையில் உள்ளது. ஆனால், குடிநீர் பல மாதங்களாக விநியோகிக்கவில்லை. இதுதொடர்பாக ஊராட்சி தலைவரிடம் ஏற்கனவே மனு வழங்கி உள்ளோம். எனவே இந்த தெருக்களை ஆய்வு செய்து, போர்க்காலை அடிப்படையில் பேவர் பிளாக் சாலை வசதி செய்து தர வேண்டும். சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.