திருவண்ணாமலை, பிப்.22: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாலையோர மரத்தின் மீது மோதி, அரசு பஸ் டிரைவர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். செங்கத்திலிருந்து சென்னை அடையாறுக்கு செல்லும் அரசு பஸ் நேற்று மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சிங்கமுக தீர்த்தம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில், பஸ்ஸில் முன் பகுதி மற்றும் கண்ணாடிகள் நொறுங்கியது. பஸ் டிரைவர் சுதாகர் (45) மற்றும் பஸ்ஸில் பயணம் செய்த 4 பயணிகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை மேற்கு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மரத்தின் மீது பஸ் மோதியதில் புளிய மரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் விரைந்துச்சென்று மரக்கிளைகளை அகற்றினர். பின்னர், வழக்கம் போல போக்குவரத்து இயங்கியது. இது குறித்து திருவண்ணாமலை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.