காங்கயம் : சாலையோரத்தில் கொட்டப்படும் சாய ஆலை கழிவுகளால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி தவிக்கின்றனர், விவசாய நிலங்களும் பாதிப்படைவதாக புகார் எழுந்துள்ளது. காங்கயம் பழையகோட்டை ரோடு மாநில நெடுஞ்சாலையிலும், காங்கயம் கரூர் ரோடு தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் சாய ஆலை கழிவுகள் இறைச்சி கடைகளின் கழிவுகள், மருத்துவ கழிவுகள், மீன் கழிவுகளை , அவ்வப்போது இரவு நேரத்தில் கொட்டி வருகின்றனர். சிலர் சாய ஆலை, பிரிண்டிங், எம்ப்ராய்டரி நிறுவனங்கள், சாய கழிவுகளையும், பிளாஸ்டிக் தயரிக்கும் நிறுவனங்கள் அதன் கழிவுகளை சாலையோரம் கொட்டி, இயற்கையை பாழ்படுத்தி வருகின்றனர். சாலையோரங்கள் கழிவு கொட்டும் இடமாக மாற்றி விட்டன. இக்கழிவுகள் மழை நீர் மூலம் அடித்துச் செல்லப்பட்டு விவசாய நிலத்தில் கலக்கிறது. இதனால் கால்நடைகள் பாதிக்கப்படுகிறது. நிலத்தில் வேலை செய்யும் விவசாய கூலி தொழிலாளர்களும் பாதிக்கின்றனர். மூட்டைகளில் கொண்டு வந்து போடப்படும் இறைச்சி கழிவுகளில் இருந்து, துர்நாற்றம் வீசுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். குப்பை கழிவுகளை சாலையோரங்களில் கொட்டக்கூடாது என, அறிவுறுத்தி எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தை தவிர, மற்ற இடங்களில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. மாசுகட்டுப்பாடு வாரியம், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, ரோட்டோரத்தில் கழிவுகளை கொட்டும் நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுகளை அகற்ற பிரத்யேக இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்….