சேலம், ஜூலை 22: சேலம் அருகே சாலையில் வேன் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் வாகனம் முழுவதும் சேதமானது. சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் டிராவல்ஸ் வேன் சொந்தமாக வைத்து ஓட்டி வருகிறார். நேற்று இடைப்பாடியைச் சேர்ந்த பக்தர்களை பழநிக்கு அழைத்துச்சென்றார். அவர்களை இடைப்பாடியில் விட்டு விட்டு, நேற்று அதிகாலை சேலம் நோக்கி வண்டியில் வந்து கொண்டிருந்தார். உத்தமசோழபுரம் பகுதியில் வந்த போது, அங்கு சாலை பணிக்காக சென்டர் மீடியன் பகுதியில் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
அதில் எதிர்பாராதவிதமாக வேன் மோதியதில் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் காயம் அடைந்த இளங்கோவை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டனர். இதனிடையே திடீரென வேன் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீணை அணைத்தனர். ஆனால், அதற்குள் வேன் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.