சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு கணக்கில் வராத ₹43 ஆயிரம் பறிமுதல்

குடியாத்தம், செப்.17: குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று விஜிலென்ஸ் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத ₹43 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் தங்க நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட நிலம், வீட்டுமனை, கட்டிடங்கள், அறக்கட்டளை, திருமணம், அக்ரிமெண்ட் என பத்திரப்பதிவுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடந்து வருவதாகவும், அதனை சரிகட்ட லஞ்சம் வசூலிக்கப்படுவதாகவும் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், டிஎஸ்பி சங்கரன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உட்பட 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை 6.30 மணியளவில் குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனர். அப்போது, பதிவுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அலுவலகத்தை மூடி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அலுவலகத்தின் உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்லாமலும், வெளியே இருந்து யாரும் உள்ளே செல்லாமலும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து சார் பதிவாளர் முத்துஅழகேசன் உட்பட அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சார் பதிவாளர் மேஜை டிராவில் இருந்து கணக்கில் வராத ₹43 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், இரவு 9 மணியளவில் சோதனையை முடித்த போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திடீர் சோதனையால் நேற்று சார் பதிவாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி