சாயல்குடி, ஜூன் 6: சாயல்குடி அடுத்துள்ள செவல்பட்டி வீரசக்கதேவி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேன் சிட்டு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 மாட்டு வண்டிகள், பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.
சாயல்குடி-செவல்பட்டி சாலையில் 6 கி.மீ இலக்கு நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதல் 3 இடங்களை பெற்ற மாட்டுவண்டி, பந்தய வீரர்களுக்கு ரொக்கப்பணம், குத்துவிளக்கு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று திரளான பொதுமக்கள் பார்வையிட்டுச் சென்றனர். போட்டி ஏற்பாடுகளை செவல்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்தனர்.