சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

பண்ருட்டி, ஜூலை 9: பண்ருட்டியை அடுத்த திருவாமூரை சேர்ந்தவர் மலையப்பன். இவரது மனைவி சங்கரி(42). இவர் பெரிய எலந்தம்பட்டை சேர்ந்த செல்வி என்பவரிடம் 1 ஏக்கர் 10 செண்ட் நிலம் வாங்கி இருந்தார். இந்த நிலத்தில் சவுக்கை பயிரிட்டு இருந்தார். நேற்று காலை 5 மணிக்கு சவுக்கைக்கு தண்ணீர் பாய்ச்ச தனது தம்பியுடன் அங்கு சென்றார்.அப்போது அங்கு அதே ஊரைச் சேர்ந்த ஆனந்து, ஆனந்து மனைவி பிரியா மற்றும் அவர்களது உறவினர் முத்து, ஏரிப்பாளையம் தண்டபாணி ஆகியோர் அந்த நிலத்தில் இருந்த சவுக்கை செடிகளை பிடுங்கிப் போட்டுக் கொண்டிருந்தனர். நிலத்தில் இருந்த அனைத்து சவுக்கை செடிகளை பிடுங்கி போட்டனர்.

ஏன் எனது நிலத்தில் இப்படி செய்கிறீர்கள் என்று சங்கரி கேட்டுள்ளார். அதற்கு 4 பேரும் சங்கரியை அசிங்கமாக திட்டி சங்கரியின் தம்பியை நெட்டி தள்ளி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் சங்கரி புகார் கொடுத்தார். புகாரின்பேரில், ஆனந்து, பிரியா மற்றும் அவர்களது உறவினர் முத்து, தண்டபாணி ஆகிய 4 பேர் மீது புதுப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை