Sunday, September 29, 2024
Home » சர்வாதிகார மனப்பான்மை கொண்ட ஆர்எஸ்எஸ், பாஜ.வை மாநில கட்சிகளால் வீழ்த்த முடியாது: ராஜஸ்தான் மாநாட்டில் ராகுல் பேச்சு

சர்வாதிகார மனப்பான்மை கொண்ட ஆர்எஸ்எஸ், பாஜ.வை மாநில கட்சிகளால் வீழ்த்த முடியாது: ராஜஸ்தான் மாநாட்டில் ராகுல் பேச்சு

by kannappan

புதுடெல்லி: ‘ஆர்எஸ்எஸ்.சும், பாஜ.வும் ஆபத்தானவை. சர்வாதிகார மனப்பான்மை கொண்டவை. மாநில அளவிலான கொள்கைகள் கொண்ட கட்சிகளால், இவற்றை வீழ்த்த முடியாது,’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் நேற்று நிறைவடைந்தது. இதில் நிறைவு உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: பாஜ, ஆர்எஸ்எஸ் போல கருத்து சுதந்திரத்தை நெரிக்கும் கட்சி அல்ல காங்கிரஸ். அதனால்தான் கட்சித் தலைமை பற்றிய கட்சி உறுப்பினர்கள் அப்பட்டமாக கருத்து கூற முடியும். இதன் காரணமாக காங்கிரஸ் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதன் விளைவுகளை நாடு இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் சர்வாதிகாரிகள், நாட்டிற்கு ஆபத்தானவர்கள். இந்த ஆட்சியில், நாட்டின் முக்கிய நிறுவனங்களின் குரல்வளை முடக்கப்பட்டுள்ளது. நீதித்துறை தவறாக வழிநடத்தப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டப்பட்டுள்ளன. ஊடகங்கள் வாயடைக்கப்பட்டு உள்ளன. பெகாசஸ் போன்ற உளவு மென்பொருள் மூலம் அரசியல் எதிராளிகளை மவுனமாக்குகின்றனர். பஞ்சாபில் விவசாயச் சட்டங்கள் மக்களுக்கு ஏற்படுத்திய பேரழிவை நாம் பார்த்திருக்கிறோம். இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது, ஆனால் வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். மாநிலங்களும் மக்களும் உரையாட கருத்து தெரிவிக்க ஒன்றியம் அனுமதிக்க வேண்டும். இந்திய மக்களிடையே உரையாடலை தடுப்பதற்கான ஒரே மாற்று வன்முறை மட்டுமே. இதைத்தான் பாஜ பரப்புகிறது. இந்த நாட்டின் நிறுவனங்கள் செயல்படுவதை நிறுத்தும் நாளில், இந்த நாடு தன்னுடன் உரையாடலை நிறுத்தும் நாளில், நாம் கடுமையான சிக்கலில் இருப்போம். இதற்கு பாஜ அரசு காரணமாக இருக்கும். இதையெல்லாம் நாம் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மக்கள் பிரிந்து கிடப்பதையும், அது நாட்டுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்பதையும் அவர்களுக்கு உணர்த்துவது நமது பொறுப்பு, அதை காங்கிரசால் மட்டுமே செய்ய முடியும். இதற்காக அக்டோபர் முதல் நாம் யாத்திரை மேற்கொண்டு மக்களுடன் மீண்டும் வலுவாக இணைவோம்.வலிமையான மற்றும் முதன்மையான தேசிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ராகுல், ‘‘காங்கிரசைப் போல, மாநில கட்சிகளால் பாஜ.வை எதிர்த்து போராட முடியாது. இது சித்தாந்தங்களின் போராட்டம். பாஜ, காங்கிரசைப் பற்றி பேசும். ஆனால், மாநிலக் கட்சிகளைப் பற்றி பேசாது, மாநில கட்சிகளுக்கு அம்மாநிலம் சார்ந்த கொள்கை மட்டுமே இருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே, மாநில கட்சிகளால் பாஜ.வை வீழ்த்த முடியாது. எனவே, இது நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் போராட்டம். இவ்வாறு அவர் பேசினார்.* மக்களுடன் தொடர்பை வலுப்படுத்த வேண்டும்ராகுல் தனது உரையில், ‘‘முதலில் நாம் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்களுடனான காங்கிரசின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதை மறுக்க முடியாது. ஆனால், தேசத்தை முன்னோக்கி வழிநடத்திவது காங்கிரஸ்தான்  என்பதை மக்கள் அறிவார்கள். மக்களுடனான தொடர்பை வலுப்படுத்த எந்த குறுக்கு வழிகளும் இல்லை. அதற்கு நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்களுடன் நாள் கணக்கில் அல்ல மாதக் கணக்கில் செலவிடுங்கள். மீண்டும் மக்களுடனான தொடர்பை நிலைநாட்ட வேண்டும், அதை வலுப்படுத்த வேண்டும். அதற்கான உங்களுடன் இணைந்து நானும் போராடுவேன்,’’ என்றும் தெரிவித்தார்….

You may also like

Leave a Comment

11 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi