கூடுவாஞ்சேரி, ஜூன் 24: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காயரம்பேடு அரசு பள்ளியில் யோகா பயிற்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 360 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காயரம்பேடு அரசு உயர்நிலை பள்ளியில் உள்ள 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
இதில், தலைமை ஆசிரியை லட்சுமி (பொறுப்பு) தலைமை தாங்கினார். உடல் கல்வி ஆசிரியர் அசோக்பாக்யராஜ் முன்னிலை வகித்தார். இதில், 360 மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், நன்னடத்தை பற்றி விளக்கி கூறினர். இதனை அடுத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினர். பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.