Friday, June 28, 2024
Home » சர்வதேச போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான தினம் பேரணி, கோலம், நாடகம் மூலம் போதைக்கு எதிராக விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான தினம் பேரணி, கோலம், நாடகம் மூலம் போதைக்கு எதிராக விழிப்புணர்வு

by Karthik Yash

திருவள்ளூர், ஜூன் 27: சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை பொருட்கள் பயன்பாட்டினை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.நிவாசபெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து போதை பொருட்கள் பயன்பாட்டினை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப் பொருள் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் மாதந்தோறும் துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடத்தி போதைப் பொருட்களின் தடுப்புகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் 672.8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட சட்டவிரோதமான பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இப்பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு மீரா திரையரங்கம் வரை சென்றது. இப்பேரணியில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டு போதை பொருட்கள் எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்களை முழக்கமிட்டு சென்றனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசுஅலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருட்கள் எதிரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகையினை வெளியிட்டு போதைப் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரையப்பட்ட ரங்கோலி கோலத்தினை பார்வையிட்டார். பிறகு போதைப் பொருளுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் நடத்திய மவுனமொழி (மைமிங்) நாடகத்தை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிராக ரங்கோலி கோலம் வரைந்தவர்க்கும், மவுன மொழி (மைமிங்) நாடகத்தில் பங்குபெற்றவர்களுக்கும் மேலும் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, கோட்டாட்சியர் ஏ.கற்பகம், உதவி ஆணையர் (கலால்) ரங்கராஜன், முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன், மதுவிலக்கு டிஎஸ்பி அனுமந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் நிஷாந்தினி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் சுதா, குழந்தைகள் நலக்குழு தலைவர் மேரி அக்சிலா, திருவள்ளூர் வட்டாட்சியர் செ.வாசுதேவன், ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவன இயக்குனர் பி.ஸ்டீபன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 29ம் தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஜூலை 29ம் தேதி ஒருநாள் நடைபெற இருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் வராது என்பதால் இம்மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு ஜூலை 29ம் தேதி செயல்பட வேண்டும். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு வருகிற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. எனவே இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

உறுதிமொழி ஏற்பு
அம்பத்தூர்: அம்பத்தூரில் அரசு தொழிற்பயிற்சி மையம் உள்ளது. ஆசிய அளவில் மிகப்பெரிய பயிற்சி மையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மையத்தில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தொழிற்கல்வி பயின்று வருகின்றனர். அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில் அம்பத்தூர் உதவி ஆணையர் கிரி, அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், தொழிற்பயிற்சி துணை இயக்குநர் செந்தில்வேலன், பயிற்சி அலுவலர்கள் முருகேசன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இறுதியாக மாணவ, மாணவிகள் அனைவரும் மது மற்றும் போதையை ஒழிப்போம் என்ற உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

திருத்தணி: திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப் இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோர் மாணவர்களுக்கு போதை பொருள் பயன்ப்படுத்துவதால், ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்து விளக்கி, போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதேபோல் திருவாலங்காடு பகுதியில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

You may also like

Leave a Comment

twelve − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi