சென்னை: நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு அதிகப்படியான வருவாய் கிடைத்து வருகிறது. இதன்காரணமாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு ரயில்வே கோட்டத்திலும் வணிக மேம்பாட்டுக்குழுவை ஏற்படுத்தி, அதிகப்படியான சரக்குகளை கையாண்டு வருகின்றனர். இதுபோக குறிப்பிட்ட நேரத்தில் சரக்கை கொண்டு சேர்க்கும் விதமாக, நாடு முழுவதும் சரக்கு ரயில்களின் வேகத்தை 50 கி.மீ.யாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்தனர். தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களிலும் சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிக்க பல்வேறு இடங்களில் தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சீரமைப்பு பணியின் காரணமாக தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில்களின் இயக்க வேகம் சராசரியாக 50 கி.மீ.,யாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2019-20ல் சரக்கு ரயில்களின் சராசரி வேகம் 28 கி.மீ., என இருந்தது. இதுவே அதற்கு அடுத்த ஆண்டான 2020-21ல் 46 கி.மீ.,ஆக அதிகரித்தது. கடந்த நிதியாண்டில் 2021-22ல் சரக்கு ரயில்களின் சராசரி வேகம் 49.4 கி.மீ.,ஆக அதிகரித்துள்ளது….