பொள்ளாச்சி, ஜன.12: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பாக, பல்வேறு அரசு அலுவலகங்களில், சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது இதில், பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் உள்ள வருவாய் கோட்ட உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு, வருவாய் கோட்ட உதவி கலெக்டர் கேத்தரின் சரண்யா தலைமை தாங்கினார். பொள்ளாச்சி மற்றும் வால்பாறை, கிணத்துக்கடவு தாசில்தார்கள், வருவாய்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவில், வருவாய்த்துறை ஊழியர்கள் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். உதவி கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தி கோலமிடப்பட்டிருந்தது. முன்னதாக, உதவி கலெக்டர் கேத்தரின் சரண்யா பொங்கல் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.