ஊட்டி,மார்ச்2:சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி மூன்றாவது நாளாக நேற்றும் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும்,அதே ஆண்டு ஜூன் 1ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3 ஆயிரத்து 170 குறைந்துள்ளது.
இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டைக் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ.,) சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடந்தது வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்து வருகிறது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.செயலாளர் தண்டபாணி,பொருளாளர் அருண்பிரபு, மகளிரணி நிர்வாகி சித்ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.