ஓசூர்: ஓசூர் அருகே புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கிராம மக்கள் சப் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் அருகே அச்செட்டிப்பள்ளி ஊராட்சி, எடப்பள்ளி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஒரு இடத்தில், நேற்று பஞ்சாயத்து தலைவர் சீனிவாசரெட்டி தலைமையில், ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்காக, கிராம மக்கள் பூமி பூஜை செய்தனர். அந்த இடத்தை ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்துள்ள ஒரு சிலர், ரேஷன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரேஷன் கடை கட்டினால் அதனை இடிப்போம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.