சேத்துப்பட்டு அக். 4:சேத்துப்பட்டு அருகே சத்துணவு பணியாளரிடம் 5 சவரன் செயினை பைக் ஆசாமிகள் பறித்து சென்றனர். சிசிடிவி காட்சியை வைத்து பைக் ஆசாமிகளை போலீசாரி தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நிர்மலா (53), சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் மாலை பணி முடிந்த பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள், நிர்மலாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் செயினை திடீரென பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மலா ‘திருடன், திருடன்’ என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். ஆனால் நகையை பறித்த மர்ம ஆசாமிகள் தங்களது பைக்கில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து நிர்மலா சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.