சென்னை: வனப்பரப்பை 33 சதவீதம் ஆக உயர்த்துதல், சதுப்பு நிலங்களை மீட்டெடுத்து மறு உருவாக்கம் செய்தல், காலநிலை மாற்றத்தை தணித்தல் ஆகியவற்றுக்காக 3 இயக்கங்கள் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது உள்ள 23.27% வனப்பரப்பை 33% ஆக உயர்த்துவதற்கு, பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படுகிறது. தனியார், பொதுமக்கள், பழங்குடியினர் பங்களிப்புடன் அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதம் வனப்பரப்பு என்ற நிலையை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம் என்ற பெயரில் சதுப்பு நிலங்களை கண்டறிந்து மீட்டெடுக்கும் பணியும் தொடங்கப்படுகிறது. முதல்வர் தலைமையில் சதுப்பு நில இயக்கம் அடுத்த 5 ஆண்டுகளில் 100 சதுப்பு நிலங்களைக் கண்டறிந்து அவற்றை மீட்டெடுத்து மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக ₹150 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ‘‘தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்” காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கொடிய விளைவுகளைக் குறைக்க ஏதுவாக ₹500 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. மரங்கள் நடப்படுவதைக் கண்காணித்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல், சதுப்பு நிலங்களை மீட்டெடுத்தல், காற்றின் தரத்தை உறுதி செய்தல், நன்னீர், உவர் நீர் மாசைக் குறைத்தல், மாநில அளவில் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ளுதல், விழிப்புணர்வை உண்டாக்குதல் போன்றவற்றின் தொடர் செயலாக்கம் மற்றும் கண்காணிப்புக்காக 7 பேர் கொண்ட தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம், ₹5 கோடி முதலீட்டில் உருவாக்கப்படுகிறது. சுற்றுச்சூழல், நிதி, ஆற்றல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், வேளாண் மற்றும் உழவர் நலன், பொதுப்பணித்துறை செயலாளர்கள், தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி ஆகிய 7 பேர் அடங்கியதாக தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் செயல்படுகிறது. இதில் அரசின் பங்காக 51 சதவீதம், பிற அரசு சார் நிறுவனங்களின் பங்காக 49% இருக்கும்….