ஈரோடு, ஆக.24: சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், சத்தியமங்கலம், பவானி, அம்மாபேட்டை போலீசார், தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன் தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (54), உத்தண்டியூரை சேர்ந்த ராமசாமி (59), பவானி, பழனியாண்டவர் கோயில் வீதியைச் சேர்ந்த ராஜா (29), அந்தியூர், முகாசிபுதூர் காலனியை சேர்ந்த கண்ணையன் (53) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 29 அரசு மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.