சென்னை: ஒட்டகங்களை சட்ட விரோதமாக தமிழகத்திற்கு கொண்டு வந்து பலியிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு சட்டவிரோதமாக ஒட்டகங்களை கொண்டு வருவதையும், பலியிடுவதையும் தடுக்க உத்தரவிடக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் 2015ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து ஒட்டகங்கள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டு பலியிடப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோதமாக ஒட்டகங்கள் கொண்டு வரப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒட்டகங்கள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டு, பலியிடும் நிகழ்வுகள் நடைபெறவில்லை என்றார். அரசு தரப்பு வாதத்தை ஏற்று, வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், ஒட்டகங்கள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டு பலியிடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக ஒட்டகங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து பலியிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்….