Wednesday, July 3, 2024
Home » சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்ததால் கொரோனா தடுப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி: இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்ததால் கொரோனா தடுப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி: இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்

by kannappan

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்ததால், கொரோனா தொடர்பான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இதில் மேற்குவங்கத்தில் மட்டும் இன்னும் வாக்குப்பதிவு முடியவில்லை. அங்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிந்த பிறகே, மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீடிக்கும். இந்தநிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், இந்த 5 மாநில முதல்வர்கள் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி, கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் புதுச்சேரி, கேரளா, அசாம் மாநில தலைமை செயலாளர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கொரோனா தொடர்பான பணிகளை மாநில அரசு மேற்கொள்ள சில தளர்வுகளை தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தனர். அதற்கு அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே அமலில் உள்ள அரசு திட்டங்கள் அல்லது ஆய்வுகள், குடிநீர் பணிகள், பிற மேம்பாட்டு பணிகளை அரசு மேற்கொள்ளலாம். அதேபோன்று தற்போது தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, சில மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கிறது. தற்போது, கடந்த சில வாரங்களாக பல மாநிலங்களில் கோரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் கடிதம் எழுதி வருகிறது. அந்த கடிதத்தில், கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக கூட்டம் நடத்த வேண்டும், அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும் என்று அதில் கூறி உள்ளனர். இதுபோன்ற கோரிக்கைகளை மனதில் வைத்து, தேர்தல் ஆணையம் கொரோனா தொடர்பான கூட்டங்கள், சுற்றுப்பயணம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்த மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, தலைமை செயலகத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக மூத்த அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், மருத்துவ குழு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கம் மாநிலத்தில் இன்னும் தேர்தல் முடிவடையாததால், அந்த மாநில முதல்வருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை….

You may also like

Leave a Comment

four × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi