சென்னை: கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிறப்பு பார்வையாளராக நில நிர்வாக ஆணையர் நாகராஜன் நியமனம் செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்களுக்கு உறுதுணையாக பறக்கு படை நியமனம் செய்யப்பட்டு அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறை மீறி பொருட்களோ, பணத்தையோ உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநிலத்தில் ஒரு சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் வந்தது. அந்த புகாரின் பேரில், தேர்தல் அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டு பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில், கோவை மாவட்டத்தில் தேர்தலை நேர்மையாக நடத்தும் வகையில் தேர்தல் பார்வையாளராக மரியம் பல்லவி தேவ் நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் பணிக்கு வரவில்லை. எனவே, ஹர்சகாய் மீனா நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவரும் மாற்றப்பட்டு பவன்குமார் பன்சால் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பதிலாக கோவிந்தராவ் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் மாவட்ட முழுவதும் கண்கணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். கோவை மாவட்டத்தில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதாக புகார் எழுந்தது. எனவே, சிறப்பு பார்வையாளராக நில நிர்வாக ஆணையர் நாகராஜன் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இன்று முதல் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார். மேலும், அவர் தேர்தல் நடத்தை விதிமுறைக கடுமையாக கடைபிடித்து சிறப்பாக தேர்தல் பணியாற்ற தேவையான நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். இன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிக்க வேண்டும். மேலும், அனைத்து வாக்கும் எண்ணும் பணிகளை பார்வையிட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது….