கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான 4 நாட்கள் மாபெரும் உழவர் தின விழா கண்காட்சி துவங்கியது

கோவை, செப் 27: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான 4 நாட்கள் மாபெரும் உழவர் தின விழா கண்காட்சி நேற்று துவங்கியது. இதனை தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து நடத்துகிறது. கண்காட்சியில், வேளாண் தொடர்பான 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், தொழில்நுட்ப கருத்தரங்குகள், செயல் விளக்கங்கள், புதிய பயிர் ரகங்கள், பயிர் ஊக்கிகள், பூச்சி நோய் எதிர்ப்பு காரணிகள், அங்கக வேளாண் இடுபொருட்கள், நானோ தொழில்நுட்பங்கள், மதிப்பூட்டல் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் வேளாண்மை, நீர் பாசன கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், உழவர் தின விழா கண்காட்சி துவக்க விழா பல்கலைக்கழக அண்ணா அரங்கில் நேற்று நடந்தது.

இதில், பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், கிராமப்புற பெண் வேளாண் தொழில் முனைவோர் மற்றும் இளைஞர் வேளாண் சாதனையாளர் நூல் தொகுப்பை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டார். புதிய பயிர் ரக தொகுப்பினை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். இதில், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோவை, கரூர், திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 6 விவசாயிகளுக்கு வேளாண் செம்மல் விருதினை வழங்கினார். சிறந்த அங்கக வேளாண் இடுபொருள் உற்பத்தியாளர் விருதினை கும்பகோணம் சேர்ந்த மோகன் என்பவருக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில், புது டெல்லி இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் துணை பொதுமேலாளர் ராம் மோகன் ரெட்டி, சென்னை நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் ஆனந்த், ஐதராபாத் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி கழக இயக்குனர் ஷேக் நா.மீரா மற்றும் வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர். விழாவில், அமைச்சர் எம்ஆப்கே பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழக முதல்வர் விவசாயத்திற்கு முக்கியத்தும் அளித்து வருகிறார். விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் கொண்டு வரப்பட்டது. தமிழில் பேசினால் கவுரவம் குறையும் என ஆங்கிலத்தில் பேசும் நபர்கள் மத்தியில், ஐதராபாத் வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழக இயக்குனர், டெல்லி துணை பொதுமேலாளர் ஆகியோர் வேறு ெமாழியை சேர்ந்தவர்கள் என்றாலும் தமிழில் உள்ள ஈடுபாடு காரணமாக தமிழில் பேசியது பாராட்டிற்குரியது.

இவர்களை போல் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் முழு ஈடுபாடுடன் தங்களின் பணியை செய்ய வேண்டும். வேளாண் பல்கலைக்கழகத்தை கலைஞர் துவக்கி வைத்தார். அவர் அன்று விதைத்த விதையால் தற்போது பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இங்குள்ள கண்காட்சியில் 300 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பார்வையிட வேண்டும். தற்போது பாட்டில் தண்ணீரை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலங்களில் அதிகளவில் மருந்துகள் பயன்படுத்தி வருவதால் தண்ணீரில் மினரல் குறைந்துள்ளது.

மூன்று போகம் விளைந்த நிலத்தில் ஒரு போகம் விளையும் நிலமாக மாறியுள்ளது. தென்னை மரம் ஏற உள்பட விவசாய பணி செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. பொள்ளாச்சி, திருப்பூர் பகுதியில் தென்னையில் வேர் அழுகல் நோய் தடுப்பு பணிகள் ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்பட்டது. விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் நேரடியாக களத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விவசாயத்திற்கு நவீனமுறை தேவை என்ற நிலை இருக்கிறது. எங்களது முக்கியமான இரண்டு நோக்கம், விவசாயத்தை இயந்திரமயமாக்கல் மற்றும் விவசாயிகளை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவது ஆகும். அதற்கான பணிகளை செய்து வருகிறோம். . இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது