சென்னை: கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கிய நிலையில், மறுதேர்தல் நடத்துவதை எதிர்த்து திமுக போட்டி வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி உறுப்பினராக தேர்வாகியுள்ள திமுகவை சேர்ந்த ஜெ.வனிதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பேரூராட்சி தலைவர் வேட்பாளராக ஆ.ராகினி என்பவர் கட்சியால் அறிவிக்கப்பட்டதால், போட்டி வேட்பாளராக தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன்.மார்ச் 4ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் ராகினி 7 வாக்குகள் மட்டுமே பெற்றதால், 8 வாக்குகள் பெற்ற தன்னை பேரூராட்சி தலைவராக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிருப்தி அடைந்த ராகினியின் குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டதையடுத்து, தவறுகள் இருப்பதாக கூறி, தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழை, தேர்தல் அலுவலர் திரும்ப பெற்றார்.தவறுகளை சரிசெய்து மீண்டும் சான்றிதழை வழங்காமல், மீண்டும் தேர்தல் நடத்தபட்டு வாக்குகள் எண்ணப்படும் என்று தேர்தல் அலுவலர் அறிவித்தது சட்டவிரோதம் என்று மனுவில் கோரியுள்ளார்.இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 4ம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கிய நிலையில், மீண்டும் தேர்தல் நடத்த முடியாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த சான்றிதழில் உள்ள கையெழுத்து தேர்தல் அலுவலரின் கையெழுத்து அல்ல. சான்றிதழில் தேதி, பிப்ரவரி 22 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் பதிலளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….
கோவை சூளேஸ்வரன் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்துவதை எதிர்த்து வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
previous post