சோமனூர்: கோவை அருகே, சாலையில் கவிழ்ந்த பெயிண்ட் லாரி, தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு பெயிண்ட் உள்ளிட்ட ரசாயனப்பொருட்களை ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை குன்னூரை சேர்ந்த பிரவீன் (35) ஓட்டினார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த கிளீனரும் வந்தார். நேற்று மதியம் கோவை கருமத்தம்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் அருகே வந்தது. தொடர்ந்து அங்குள்ள பாலத்தில் லாரி ஏற முயன்றது. அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாக ஓடியது. பின்னர், 10அடி பள்ளத்தில் இருந்த சர்வீஸ் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. தடுப்புவேலியில் டீசல் டேங்க மோதியதால் டேங்க் உடைந்து சாலை முழுவதும் டீசல் கொட்டி பரவியது. அதே வேகத்தில் லாரியில் இருந்த வாட்டர் பிரைமர் பெயின்ட், தின்னர் உள்ளிட்ட ரசாயன டப்பாக்கள் சாலையோரம் சிதறியது. சாலை முழுவதும் டீசல் மற்றும் பெயிண்ட ஆறாக ஓடியது.அப்போது கண் இமைக்கும் நேரத்தில் லாரி தீப்பிடித்தது. டீசல் டேங்க் உடைப்பு மற்றும் தின்னர், பெயிண்டால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் சூலூர் தீயணைப்பு வீரர்கள் வந்து போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதும் லாரி மற்றும் லாரியில் இருந்த பெயிண்ட் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது. லாரி டிரைவர் மற்றும் கிளீனர் எட்டிக்குதித்து உயிர் தப்பினர். இதில், கிளீனருக்கு காயம் ஏற்பட்டது. அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்….