கோவை அரசு பொருட்காட்சி மேலும் 2 நாள் நீட்டிக்க கோரிக்கை

 

கோவை, ஜூலை 6: தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பில் கோவை வஉசி மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இங்கு அரங்கம் அமைத்துள்ள வியாபாரிகள் சார்பில், தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவையில் அரசு பொருட்காட்சி கடந்த 29.05.2024 அன்று துவக்கப்பட்டது. அரசின் நலத்திட்டங்களை மக்கள் கண்டுகளித்து வருகிறார்கள்.

பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள். இப்பொருட்காட்சி, வருகிற 12.07.2024 அன்று நிறைவுபெற உள்ளது. வழக்கமாக, கோவையில் அரசு பொருட்காட்சி கோடை விடுமுறை நாட்களில் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மிகவும் காலதாமதமாக துவக்கப்பட்டது. தற்போது, கோடை விடுமுறை முடிந்து, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டன.

அதனால், இப்பொருட்காட்சியை காண மக்களின் வருகை குறைவாக உள்ளது. இதுவரை சுமார் 1.50 லட்சம் பேர் மட்டுமே வருகை புரிந்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு 2.50 லட்சம் பேர் வருகை புரிந்தனர். அதற்கு ஏற்ப வருவாய் இருந்தது. ஆனால், தற்போது வருவாய் அளவும் குறைந்துள்ளது. எனவே, இப்பொருட்காட்சியை 14.07.2024 வரை நீட்டிப்பு செய்து தரும்படி வேண்டுகிறோம்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்