கோவையில் கால் டாக்சி டிரைவர் கொலையில் கைதான தம்பதி விஷ ஊசி போட்டு சென்னையில் 4 பேரை கொன்றனரா? போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

கோவை: கோவையில் கால் டாக்சி டிரைவர் கொலையில் கைதான, விஷ ஊசி கொலையாளி தம்பதி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சனு (31). கால் டாக்சி டிரைவர். இவருக்கு கடந்த 8ம் தேதி இரவு செல்போனில் அழைப்பு வந்தது. வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் இருப்பதாகவும், கோவை நகருக்கு செல்லவேண்டும் எனவும் அழைத்துள்ளனர். சனு அங்கே சென்றார். அதற்கு பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பெற்றோர் பல்வேறு பகுதியில் தேடி வந்தனர். இந்நிலையில் அடுத்த நாள் காலை ஓணாப்பாளையம் ரோட்டில் கார் நிற்பதும், அதன் பின்னால் சனு தலை, முதுகில் ரத்தக்காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இது குறிதது வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது சனுவை கொலை செய்தது சென்னை திருப்போரூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் (42), இவரது 2வது மனைவி அமலோற்பவம் (35) ஆகியோர் என தெரியவந்தது. ஸ்டீபன் மீது சென்னையில் 4 கொலை வழக்கு, துப்பாக்கி வைத்து மிரட்டிய வழக்கு இருப்பதாக தெரிகிறது. பிஇ படித்த இவர் நெட்வொர்க் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார்.ஸ்டீபன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘என் முதல் மனைவிக்கு பல கோடி ரூபாய் சொத்து உள்ளது. அவர் எனது நடவடிக்கை பிடிக்காமல் சென்றுவிட்டார். என் வீட்டில் குழந்தைகளை கவனிக்க வந்த அமலோற்பவத்தை மயக்கி 2வது திருமணம் செய்தேன். இதற்காக அவரது கணவரை விஷ ஊசி போட்டு கொலை செய்தேன். இது தொடர்பாக சென்னை போலீசில் எங்கள் 2 பேர் மீது வழக்கு உள்ளது. கைதாகி சிறை சென்று ஜாமீனில் வந்து தலைமறைவாக இருந்தோம். கோவையில் 6 ஆண்டாக வசித்து வந்தேன். என் முதல் மனைவியின் நிலம், சொத்து மூலமாக கிடைத்த பணத்தை வைத்து ஜாலியாக செலவு செய்தோம். வடவள்ளி, கல்வீரம்பாளையம், பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதியில் வசித்து வந்தோம். கடைசியாக கலிக்கநாயக்கன்பாளையத்தில் வசித்தோம். எங்களிடம் பணம் இல்லாததால் திருட திட்டமிட்டோம். கால் டாக்சி டிரைவர் சனு அதிக பணம் வைத்திருப்பதாக எங்களுக்கு தெரியவந்தது. எங்கே போனாலும் இவர் பணம் வைத்திருப்பதாக தெரியவந்தது. எனவே சனுவை செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்தோம். அவரை குறிப்பிட்ட ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்து கட்டையால் தாக்கினோம். அதில் இவர் மயங்கி விழுந்தார். பின்னர் இறப்பை ஏற்படுத்தும் மாத்திரையை நீரில் கரைத்து ஊசி போட்டோம். இதில் 2 நிமிட நேரத்தில் சனு இறந்து விட்டார். அவரின் 2 செல்போன்களையும் உடைத்து வீசி விட்டோம். அவரிடம் அதிக பணம் இருக்கும் என நினைத்தோம். ஆனால் 6 ஆயிரம் ரூபாய்தான் இருந்தது. நாங்கள் அவரை எங்களது செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதால் ‘‘கால் லிஸ்ட்’’ மூலமாக போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டார்கள்’’ என்றார். ஸ்டீபன் சென்னையில் 4 பேரை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவையில் கால் டாக்சி டிரைவரை கொன்றதுபோல சென்னையிலும் 4 பேரையும் விஷ ஊசி போட்டு கொன்றனரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இவர்களை சென்னை போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்….

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்