கோவில்பட்டி, ஜூன் 6: கோவில்பட்டியில் காரில் புகையிலை பொருட்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவில்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காரில் கடத்தப்படுவதாக எஸ்பி பாலாஜி சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் எஸ்பி தனிப்பிரிவு எஸ்ஐ ரவிக்குமார் மற்றும் போலீசார். மந்தித்தோப்பு ரோடு தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட 57 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காருடன் அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கார் டிரைவரான நெல்லை அருகே உள்ள கரையிருப்பு வடக்கு தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (36) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை, கோவில்பட்டி ஜேஎம் 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.