ஈரோடு, ஜூலை 30: ஈரோட்டை சேர்ந்த சீனிவாசன் என்பவர், சித்தோட்டில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரது கோழிப்பண்ணையில் சில நாட்களாக கோழி குஞ்சுகள் மாயமாகி வந்தது. இந்நிலையில், சீனிவாசன் கோழிப்பண்ணையில் சோதனை செய்தபோது, 7 அடி நீளமுள்ள நாக பாம்பு பதுங்கி இருப்பதை பார்த்தார். இதையடுத்து சீனிவாசன் பாம்பு பிடி வீரரான யுவராஜாவுக்கு தகவல் அளித்தார்.
அங்கு சென்ற யுவராஜா கோழிப்பண்ணையில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை உயிருடன் மீட்டார். இதேபோல், ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த போலீஸ் எஸ்ஐ சுந்தர்ராஜன் வீட்டில் பாம்பு இருப்பதாக வந்த தகவலின்பேரில், அங்கு சென்று 3.5 அடி நீளமுள்ள கொம்பேரி முக்கன் பாம்பையும், ரங்கம்பாளையம் ரயில் நகரில் வீட்டில் பதுங்கியிருந்த 4 அடி சாரை பாம்பையும், சாஸ்திரிநகரில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த 4 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் பாம்பையும் மீட்டுள்ளதாகவும், இந்த பாம்புகளை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக யுவராஜா கூறினார்.